கொலம்பியா நிலநடுக்கம்: ஷகிரா, பியான்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நிவாரண உதவி அறிவிப்பு!

கொலம்பியா நிலநடுக்கம்
Advertisement

கொலம்பியா நாட்டின் மேற்கே அமைந்துள்ள சாக்கோ மாகாணத்தில் கடந்த 10–ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில், இதுவரை 312 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 29,000-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில், ஏராளமானோர் வீடற்றவர்களாகியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், சாக்கோ மாகாணத்தில் 69,000 பேர் பாதிப்புக்குள்ளானவர்கள் அல்லது புலம்பெயர்ந்தோர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல கிராமங்கள் தரைமட்டமான நிலையில், உடனடி நிவாரண உதவிகளும் மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கொலம்பியா நிலநடுக்கம்

இந்த பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு பல பிரபலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அந்த வகையில், பிரபல பாடகிகளான ஷகிரா, பியான்ஸ் மற்றும் கரோல் ஜி ஆகியோர் குறிப்பிடத்தக்க அளவில் நன்கொடைகளை அறிவித்துள்ளனர்.

கொலம்பியாவின் சாக்கோ மாகாணத்தில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்ட பாடகி ஷகிரா, அங்கு 10 பள்ளிகளை மறுகட்டமைப்பு செய்வதற்கும், ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை மீட்டெடுப்பதற்கும் உதவி செய்ய முன்வந்துள்ளார். இந்த மறுசீரமைப்புப் பணிகளுக்கு இரு சர்வதேச பங்குதாரர்கள் தலா 5 லட்சம் அமெரிக்க டாலர் (தோராயமாக ₹4.75 கோடி) வழங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியா நிலநடுக்கம்

மற்றொரு பாடகியான பியான்ஸ், தனிப்பட்ட முறையில் 10 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ₹9.5 கோடி) நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக அளிக்க முன்வந்துள்ளார். மேலும், பிரபல கொலம்பிய பாடகியான கரோல் ஜி, தனது தொண்டு நிறுவனம் மூலம் 12 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ₹11.4 கோடி) நன்கொடையாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நன்கொடைகள் உணவு, தண்ணீர், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொலம்பியா நிலநடுக்கம்

இந்த முக்கிய நபர்களின் உதவி, நிலநடுக்கத்தால் துவண்டுபோன சாக்கோ மாகாண மக்களுக்கு புத்துயிர் அளிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இத்துடன், பிற சர்வதேச நிவாரண அமைப்புகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

Advertisement
Written by

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.