H-1B விசாவிற்கு கூடுதல் கட்டணம்: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய முன்மொழிவு

H-1B விசா
Advertisement

அமெரிக்காவில் H-1B விசா ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் $103,265 (சுமார் ரூ.86 லட்சம்) கூடுதல் கட்டணம் விதிக்க அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை (DHS) புதிய முன்மொழிவு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த முன்மொழியப்பட்ட விதிமுறை ஆகஸ்ட் 25, 2026 அன்று ஃபெடரல் ரெஜிஸ்டரில் வெளியிடப்பட உள்ளது.

தற்போது அமெரிக்க நாடாளுமன்றம் H-1B விசா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 65,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற வழக்கமான வரம்பை நிர்ணயித்துள்ளது. மேலும், அமெரிக்க கல்வி நிறுவனங்களில் முதுகலை அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்ற வெளிநாட்டு பணியாளர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த புதிய கட்டணம் 65,000 வழக்கமான விசாக்களுக்கும், 20,000 முதுகலை ஒதுக்கீட்டு விசாக்களுக்கும் பொருந்தும்.

இந்த முன்மொழிவு, 2025 ஆம் ஆண்டில் டிரம்ப் நிர்வாகம் H-1B விசாக்களுக்கு $100,000 கட்டணம் விதித்த திட்டத்தை அடுத்து வந்துள்ளது. அந்த திட்டத்தை மாசசூசெட்ஸ் மாவட்ட நீதிபதி லியோ சொரோகின் ஜூன் 8, 2026 அன்று “சட்டவிரோத வரி” என்று கூறி ரத்து செய்திருந்தார். அந்த உத்தரவை நிறுத்தி வைக்க கோரிய மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஜூலை 24, 2026 அன்று நிராகரித்ததைத் தொடர்ந்து, DHS இந்த புதிய முன்மொழிவை முன்வைத்துள்ளது.

இந்த புதிய $103,265 கட்டணம், ஏற்கனவே உள்ள அனைத்து H-1B விண்ணப்ப கட்டணங்களுக்கும் மேலதிகமாக, தனிப்பட்ட கூடுதல் கட்டணமாக செயல்படுத்தப்படும். DHS இன் கணக்கீட்டின்படி, ஆண்டுக்கு 85,000 H-1B விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கட்டணம் மூலம் ஆண்டுக்கு தோராயமாக $8.8 பில்லியன் வருவாய் ஈட்ட முடியும்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த கூடுதல் கட்டணம் H-1B ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட மனுக்களுக்கு மட்டுமே பொருந்தும். லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தாக்கல் செய்யும் மனுக்கள் போன்ற ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்படாத H-1B மனுக்களுக்கு இந்தக் கூடுதல் கட்டணம் பொருந்தாது. மேலும், ஏற்கனவே H-1B நிலையில் உள்ளவர்கள் புதிய முதலாளிக்கு மாறும் போது தாக்கல் செய்யும் மனுக்களுக்கும் இந்த கட்டணம் பொருந்தாது.

இந்த முன்மொழிவு குறித்து பொதுமக்களின் கருத்துக்களை அடுத்த 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு DHS அழைப்பு விடுத்துள்ளது. கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு இறுதி விதிமுறை வெளியிடப்படும், இது 2026 ஆம் ஆண்டிற்குள் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் செய்தி தொடர்பாளர் ஜாக் காலர் கூறுகையில், “முன்மொழியப்பட்ட H-1B கட்டணமானது, சட்டப்பூர்வ குடியேற்ற திட்டங்களை ஆய்வு செய்யவும், சரிபார்க்கவும் மற்றும் ஆதரிக்கவும் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவுகளை ஈடுகட்டுவதற்காகவே கொண்டுவரப்படுகிறது. இல்லையெனில் இச்செலவுகள் வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த முன்மொழிவு தொழில்நுட்பம் மற்றும் நிதித் துறைகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, H-1B விசா பயனாளிகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்பதால், இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு இந்த முன்மொழிவு பெரும் சவாலாக அமையும்.

Advertisement
Written by

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.