மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இக்பால், உடலில் தொடர்ந்து ஏற்படும் தாங்க முடியாத எரிச்சல் காரணமாக இரவு, பகல் பாராது குளத்திலேயே தங்கி வந்த நிலையில், அவருக்கு மருத்துவ உதவி வழங்க தொழிலதிபர் அனந்த் அம்பானி முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக்பாலின் உடலில் தொடர்ந்து கடுமையான எரிச்சல் ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருப்பதன் மூலம் நிவாரணம் பெற முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குளத்திலேயே உணவு உட்கொண்டு, பெரும்பாலான நேரத்தை தண்ணீருக்குள் கழித்து வந்த அவர், பல்வேறு சிகிச்சைகளைப் பெற்றும் தனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என கூறியிருந்தார்.
தனது உடல்நலப் பிரச்சினைக்கு மருத்துவ காரணத்தை விட, “ஜின் அல்லது பேய் பிடித்திருப்பது” காரணமாக இருக்கலாம் என சிறுவன் நம்பியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்காக பல்வேறு முறைகளில் சிகிச்சை பெற்ற போதிலும் பிரச்சினை தொடர்ந்ததாகவும், மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க அரசு உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இக்பால் குளத்துக்குள் நீண்ட நேரம் தங்கியிருக்கும் காட்சிகள் மற்றும் அவரது பரிதாப நிலை தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின. இதையடுத்து அவரது நிலை குறித்து பலரும் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
இதன் தொடர்ச்சியாக, சிறுவனுக்கு உதவ அனந்த் அம்பானி முன்வந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுவனை மும்பைக்கு அழைத்து வந்து, ரிலையன்ஸ் மருத்துவமனையில் முழுமையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம், நீண்டகாலமாக அவதிப்பட்டு வரும் இக்பாலின் உடல்நலப் பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை மருத்துவ ரீதியாக கண்டறிந்து, உரிய சிகிச்சை வழங்க முடியும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும், அனந்த் அம்பானி சார்பிலான மருத்துவ உதவி மற்றும் சிறுவனின் தற்போதைய உடல்நிலை தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் வரை, சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை உறுதிப்படுத்தப்படாத செய்திகளாகவே அணுகுவது அவசியமாகும்.
