வாயு வெளியேற்றம் என்பது உடலின் இயற்கையான செயல்பாடு. ஆனால், பொது இடங்களிலோ, அலுவலகங்களிலோ அல்லது அமைதியான சூழலிலோ இருக்கும்போது, சத்தம் அல்லது நாற்றத்தின் காரணமாக நாம் வாயுவை அடிக்கடி அடக்கி வைக்கிறோம். இது சாதாரணமாகத் தோன்றினாலும், தொடர்ந்து இப்படி செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
வாயுவை அடக்கினால், அது குடலிலேயே தங்கி, வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தி, வலியையும் உப்புசத்தையும் உண்டாக்கும். தொடர்ந்து அடக்கினால், வயிறு இறுகி, வாயுவை வெளியேற்றும் இயல்பான செயல் பாதிக்கப்படும். கூடுதலாக, வீக்கம், தசைப்பிடிப்பு, அஜீரணம் போன்ற செரிமானச் சிக்கல்களும் ஏற்படலாம்.
அடக்கப்பட்ட வாயு சில சமயங்களில் வாய் வழியாக ஏப்பமாக வெளியேறுகிறது. அரிதாக, அது இரத்த ஓட்டத்தில் கலந்து நுரையீரல் வழியாக மூச்சுடன் வெளியேறுவதும் உண்டு. ஆயினும், நீண்ட காலமாக வாயுவை அடக்குவதால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உண்டாகும் என்பதற்கு அறிவியல் ரீதியான தெளிவான ஆதாரங்கள் இல்லை. எனினும், வயிற்று அழுத்தம், வலி, உப்புசம் மற்றும் துர்நாற்றம் போன்றவை உறுதியாக ஏற்படுகின்றன.
எனவே, வாயுவை இயற்கையாக வெளியேற்ற அனுமதிப்பது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதைத் தவிர்க்க சில ஆரோக்கியமான பழக்கங்களை மேற்கொள்ளலாம். வாய்வை அதிகரிக்கும் உணவுகளைக் குறைத்தல், உணவை மெதுவாகவும் நன்கு மென்றும் சாப்பிடுதல், உணவுக்குப் பிறகு சிறிது நடைபயில் செய்தல் அல்லது லேசான யோகாசனங்களைச் செய்தல் போன்றவை வாயுவை எளிதாக வெளியேற்ற உதவும்.
முக்கியமாக, உடல் இயற்கையாகச் செய்ய விரும்பும் ஒரு செயலை நாம் அடக்கினால், அது பெரும்பாலும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். வாயு வெளியேற்றமும் இதில் விதிவிலக்கல்ல. எனவே, சரியான நேரத்திலும் இடத்திலும் உடலுக்கு வசதியாக அதை வெளியேற்ற அனுமதிப்பது சிறந்த ஆரோக்கியப் பழக்கம் ஆகும்.

