150 ஆண்டுகள் உயிர்வாழும் உலகசாதனையாளர்: எந்த உயிரினம் தெரியுமா?

உலகசாதனையாளர்

மனித சமுதாயத்தில் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 80 வயது வரை எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், பூமி என்ற இந்த பிரபஞ்சத்தில், மனிதர்களை விட பன்மடங்கு அதிக காலம் வாழக்கூடிய சில விலங்கினங்களும் இருக்கின்றன.

குறிப்பாக, 100 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழும் உயிரினங்கள் ஏராளம். அவற்றிலும் உலகத்திலேயே மிக நீண்ட நாட்கள் வாழும் உயிரினமாக ஆமை கருதப்படுகிறது. அறிவியல் ஆய்வுகளின் படி, சில பெரிய நில ஆமை வகைகள் 150 ஆண்டுகள் வரை கூட வாழக்கூடிய வல்லமை பெற்றவை.

இந்த ஆமைகளின் முன்னோர்கள் டைனோசர்கள் சுற்றித் திரிந்த காலத்தில் இருந்தே இந்த பூமியில் வசித்து வந்துள்ளனர். ஏறத்தாழ 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இவற்றின் பயணம், பல பனியுகங்களையும், பெரும் அழிவுகளையும் தாண்டி இன்றும் தொடர்கிறது.

இந்த நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணம் இவற்றின் மிகவும் மெதுவான வளர்சிதை மாற்ற விகிதமாகும். மிகக் குறைந்த அளவு ஆற்றலைப் பயன்படுத்தி, அமைதியான, சலனமில்லாத வாழ்க்கை முறையை இவை பின்பற்றி வருகின்றன.

ஆமைகளின் வலுவான மற்றும் கனமான மேலோடு இயற்கையின் அற்புதமான பாதுகாப்பு கேடயமாக செயல்படுகிறது. எதிரிகள் நெருங்கும் போது, தங்களின் தலை மற்றும் கால்களை உடனடியாக இந்த உறுதியான ஓட்டிற்குள் பின்வாங்கி, அவை உயிர் தப்பி விடுகின்றன.

இவற்றின் உணவு முறை மிகவும் எளிமையானது; புல், இலைகள், பழங்கள் போன்ற முற்றிலும் தாவர அடிப்படையிலான உணவுகளையே பெரும்பாலான நில ஆமைகள் நாடுகின்றன.

பலர் நினைப்பதைப் போல ஆமையின் ஓடு வெறும் புற உறை மட்டுமல்ல, அது அவற்றின் உடற்கூறோடு ஒருங்கிணைந்த முக்கிய அங்கமாகும். ஏறக்குறைய 50 எலும்புகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு இந்த சிக்கலான ஓடு உருவாகிறது. இவற்றின் எளிமையான வாழ்க்கை முறையும், இயற்கை உணவுகளும், மன அழுத்தமில்லாத இருப்பும்தான், பல நூற்றாண்டுகளாக இவற்றை இந்த உலகில் காப்பாற்றும் இரகசிய மந்திரமாக அமைகிறது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net