இளைஞரை குத்திக் கொன்ற ஆப்கானிய புகலிடக் கோரிக்கையாளருக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறை

பிரித்தானியா

பிரித்தானியாவின் லண்டன் நகரில் 26 வயதுடைய பர்மானுல்லா ஷெர்சாத் என்ற இளைஞரை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்த வழக்கில், 18 வயதுடைய ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளரான சுலைமான் தஜாயி என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியிலுள்ள அபே ஆர்சர்ட் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு பணி முடிந்து திரும்பிய பர்மானுல்லா ஷெர்சாத்தை, அங்கு மறைந்திருந்த சுலைமான் தஜாயி கத்தியால் பத்து தடவைகளுக்கு மேல் குத்திக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதி அஞ்சலா ராபர்ட்டி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பொலிஸாரின் விசாரணைகளின்படி, லீட்ஸ் பகுதியில் வசித்து வந்த தஜாயி, அங்குள்ள கடையொன்றில் சமையலறை கத்தியை கொள்வனவு செய்துவிட்டு, சுமார் 150 மைல் தூரம் ரயிலில் பயணித்து லண்டனை அடைந்துள்ளார். முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து பர்மானுல்லாவின் வீட்டின் அருகில் காத்திருந்த அவர், அவர் வந்தவுடன் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினர் மற்றும் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

கொலையாளி தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இக்கொலையை முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட நபர் தனது உறவினரின் மனைவியை பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும், தலிபான் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் சந்தேகத்துடனான விரோதப் போக்கை குற்றவாளி கொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும், பாதிக்கப்பட்ட இளைஞர் மிகவும் அமைதியானவர், கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் மற்றும் கடின உழைப்பாளி என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் மீண்டும் லீட்ஸ் நகருக்கு தப்பிச் சென்ற சுலைமான் தஜாயியை சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்தனர். ஒரு மனிதனை வேட்டையாடுவது போல பின்தொடர்ந்து சென்று கொடூரமாக கொலை செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, குற்றவாளிக்கு இந்த கடுமையான தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Written by

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.