பாலிவுட்டின் முக்கிய நடிகையும், ‘லகான்’ திரைப்படம் மூலம் பிரபலமானவருமான சுஹாசினி முலே, தேசிய விருது பெற்றவர். தனது 60 ஆம் வயதில் பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலரை மணந்துள்ளார்.
நீண்ட காலமாகத் திருமணம் செய்துகொள்ளாமல், தனக்கு ஏற்றவர் கிடைக்கவில்லை என்று கூறியிருந்த அவர், இறுதியில் தனக்கொத்த எண்ணங்கள் கொண்ட ஒருவரைச் சந்தித்துள்ளார்.
தனது சக கலைஞர் ஒருவரின் அறிவுரையின் பேரில், தொழில்முறை வாய்ப்புகளுக்காகப் பேஸ்புக் கணக்கைத் தொடங்கிய சுஹாசினி முலே, அப்போது தான் இது தனது வாழ்க்கையை மாற்றப்போகிறது என்பதை உணரவில்லை.
கணக்கைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, பரிந்துரைகள் மூலம் அத்துல் குர்து என்பவர் அறிமுகமானார். லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் திட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அணுசக்தி விஞ்ஞானியான அவர், அறிவியலில் ஆர்வம் கொண்ட சுஹாசினிக்கு மிகவும் பொருத்தமானவராக இருந்தார்.
“LHC என்றால் என்ன?” என்ற கேள்வியுடன் தொடங்கிய அவர்களின் உரையாடல், படிப்படியாக விரிவடைந்து, அறிவியல் பேச்சிலிருந்து தனிப்பட்ட விருப்புகள், குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் பகிர்வதற்கு வழிவகுத்தது.
பின்னர், அத்துல் குர்து தான் ஒரு வாழ்க்கைத்துணையைத் தேடுவதாக மறைமுகமாகத் தெரிவிக்க, சுஹாசினிக்கு முதலில் சற்றுத் தயக்கம் ஏற்பட்டது. பேஸ்புக்கில் பழகிய நபரை நம்பி எப்படித் திருமணம் வரை செல்வது என்று அவர் யோசித்தார். நண்பர்களின் அறிவுரையின்படி, அவரது பின்னணி குறித்து முழுமையாக விசாரித்து, அனைத்து தகவல்களும் நம்பகமானவை என உறுதிப்படுத்திக் கொண்டார்.
இருவரும் நேரில் சந்தித்துப் பேசியபோது, பரஸ்பர புரிதல் இருப்பது உறுதியானது. இதையடுத்து, அறிமுகமான 75 நாட்களிலேயே திருமணம் செய்யும் முடிவை எடுத்தனர்.
2011 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்ற இவர்களின் திருமணம், இன்று வரை 15 ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் நீடித்து வருகிறது. தனியாக இருந்தாலும் தனிமையில் இல்லாத தன்னம்பிக்கை மிக்க பெண்ணான சுஹாசினி, தனது முற்போக்கு சிந்தனைகளுடன் ஒத்துப்போன இந்த விஞ்ஞானியை மணந்து, மன நிறைவுடன் வாழ்கிறார்.
மேலும் செய்திகள்




