சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணி புதிய உலக சாதனையை படைத்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் கம்பியா அணிக்கு எதிராக ஜிம்பாப்வே, 4 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்து உலக அளவிலான சாதனையை நிரூபித்துள்ளது. இந்த போட்டி நைரோபி, கென்யாவில் நடைபெற்றது.
கேப்டன் சிக்கந்தர் ராசா ஜிம்பாப்வே அணியை தலைமையேற்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். களத்தில் இறங்கிய ஜிம்பாப்வே வீரர்கள் கம்பியாவின் பந்துவீச்சை நான்கு பக்கமும் சிதறடித்தனர். தொடக்க வீரர்கள் பிரைன் பென்னெட் 26 பந்துகளில் 55 ரன்கள் மற்றும் மருமணி 19 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.

அதனை தொடர்ந்து சிக்கந்தர் ராசா, 43 பந்துகளில் 133 ரன்கள் குவித்தார். இதில் அவர் 15 சிக்சர்களையும், 7 பவுண்டரிகளையும் அடித்தார். குறிப்பாக, 33 பந்துகளில் சதம் அடித்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2வது அதிவேக சதம் என்ற பெயரை பெற்றார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 309 ஆக இருந்தது.
அவரது ஆட்டத்தினை தொடர்ந்து கிளைவ் 17 பந்துகளில் 53 ரன்கள் குவித்து, ஜிம்பாப்வே அணிக்கு 344 ரன்கள் என்ற மாபெரும் ஸ்கோரை எட்டியபோது, இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை முறியடித்தது.
அதற்கு முன்னர், 2023 ஆம் ஆண்டு நேபால் அணி மங்கோலியாவுக்கு எதிராக 314 ரன்கள் குவித்து அதிகபட்ச ஸ்கோர் சாதனை படைத்தது. ஜிம்பாப்வே அந்த சாதனையை முறியடித்து, புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. மேலும், ஒரே இன்னிங்ஸில் 27 சிக்சர்கள் அடித்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத சாதனையை நிகழ்த்தியது.
கம்பியா அணிக்கு 345 ரன்கள் என்ற இலக்கு கொடுக்கப்பட்டபோது, அவர்கள் 54 ரன்களில் மட்டுமே சுருண்டு, 290 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றியைப் பெற்றது.
மேலும் செய்திகள்





