‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், ‘டில்லு ஸ்கொயர்’, ‘டிராகன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமானவர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த உடல் மற்றும் மனரீதியான வேதனைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தொகுப்பாளர் தன்யா வர்மாவுக்கு அளித்த உருக்கமான பேட்டியில், தனது முன்னாள் உறவை ‘நார்சிசிஸ்டிக் அப்யூஸ்’ (Narcissistic Abuse) எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த உறவு தனது தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாய்ப்புகள் என அனைத்தையும் எப்படிப் பாதித்தது என்பதையும் அவர் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக வேதனையை அனுபவித்தேன்
தொடக்கத்தில் அன்பு மற்றும் அக்கறையாகத் தெரிந்த சில செயல்கள், படிப்படியாகக் கட்டுப்படுத்தும் நடத்தையாக மாறியதாக அனுபமா குறிப்பிட்டார். இப்படிப்பட்ட உறவில் இருப்பவர்களால், தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை ஆரம்பத்திலேயே புரிந்துகொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். தனது நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்களை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிந்தவர்கள் கவனித்ததாகவும், எப்போதும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த தான், படிப்படியாக மற்றவர்களிடமிருந்து விலகி அமைதியாக மாறியதை நெருக்கமானவர்கள் உணர்ந்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும், தான் அனுபவித்த வேதனையை யாரிடமும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. தனது துணையைப் பற்றி மற்றவர்கள் தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற எண்ணத்தால் பல விஷயங்களை மறைத்ததாகவும் அவர் கூறினார்.
மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் என்ற ஷாக்!
அந்த உறவில் ஒன்றிரண்டு முறை டேட்டிங் செய்த பிறகு, பழகத் தொடங்கிய மூன்று மாதங்களுக்கு உள்ளேயே திருமணம் தொடர்பான பேச்சுகள் ஆரம்பித்ததாக அனுபமா அதிர்ச்சியுடன் தெரிவித்தார். அந்த நபர் அனுபமாவை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். “அவரது குடும்பத்தினரைச் சந்தித்து, அவர்களுடன் உணவு சாப்பிட்டேன். டேட் செய்யத் தொடங்கி மூன்று மாதங்களுக்குள் நிச்சயதார்த்தம் செய்ய வேண்டும், எந்த இடத்தில் நிச்சயம் செய்யலாம் என்பது குறித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்” என்று கூறிய அனுபமா, பணத்திற்காக அந்த உறவைத் தேர்ந்தெடுத்ததாகத் தன் மீது சுமத்தப்பட்ட ‘கோல்டு டிக்கர்’ குற்றச்சாட்டையும் மறுத்தார். திருமணம் செய்து கொண்டால், விரைவிலேயே விவாகரத்தில் முடியக்கூடும் என்பதை உணர்ந்ததாலேயே திருமண முயற்சியைத் தான் நிறுத்தியதாகவும் அவர் கூறினார்.
தனது சினிமா வாய்ப்புகளையும் வாழ்க்கையையும் பாதித்த உறவு
அந்த உறவால் தனது தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி, திரைத்துறைப் பயணமும் பெரிதும் பாதிக்கப்பட்டதாக அனுபமா கூறினார். குறிப்பாக, தனது திரை வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான ‘டிராகன்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாமல் போனதையும் அவர் சுட்டிக்காட்டினார். “எனது வேலை மட்டுமின்றி, வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் அவர் கட்டுப்படுத்தத் தொடங்கினார்” என்று அனுபமா தெரிவித்தார். இதனால் முக்கியமான வாய்ப்புகளிலும் முழுமையாகச் செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
“ஒருநாள் ரெமோ; மறுநாள் அந்நியன்”
அனுபமாவின் பேட்டியில் மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் அம்சம், தனது முன்னாள் காதலரின் குணத்தைப் பற்றிக் கூறிய விவரம். விக்ரம் நடித்த ‘அந்நியன்’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களை உதாரணமாகக் காட்டி, தனது முன்னாள் துணையின் நடத்தையை விவரித்தார்.
“அவருடன் வாழ்ந்தது ‘அந்நியன்’ கதாபாத்திரத்துடன் வாழ்ந்ததைப் போல இருந்தது. சில நாட்களில் அவர் ரெமோவைப் போல உச்சபட்ச அன்புடன் நடந்துகொள்வார். இப்படியொரு அற்புதமான மனிதர் நம் வாழ்க்கையில் கிடைத்திருக்கிறாரே என்று நினைப்பேன். ஆனால் மறுநாளே அந்நியனைப் போல மாறி, மிகவும் கொடூரமாக நடந்துகொள்வார்” என்று கூறினார். அதன்பிறகு மீண்டும் மன்னிப்புக் கேட்டு, இனி அவ்வாறு நடந்துகொள்ள மாட்டேன் என்று உறுதி அளிப்பார். அதீதமான அன்பு, கோபம், கட்டுப்பாடு, மன்னிப்பு என இந்தச் சுழற்சி தொடர்ந்து நீடித்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த பாதிப்பை அடையாளம் காண்பது எளிதல்ல
நார்சிசிஸ்டிக் அப்யூஸை அனுபவிப்பவர்களால், தாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்பதை உடனடியாக அடையாளம் காண முடியாது என்றும் அனுபமா கூறினார். நடிகை மடோனா செபாஸ்டியன் இதுதொடர்பாகப் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றைப் பார்த்தபோதுதான், அதில் கூறப்பட்ட விஷயங்கள் தன்னுடைய அனுபவத்துடன் முழுமையாக ஒத்துப்போவதை உணர்ந்ததாகத் தெரிவித்தார். இதேபோன்ற உறவில் இருப்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதாகவும் அனுபமா கூறினார்.
தனது வாழ்க்கையின் மிகவும் கடினமான காலகட்டத்திலிருந்து தற்போது படிப்படியாக மீண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நடிகர் த்ருவ் விக்ரமுடன் அனுபமாவை இணைத்து நீண்ட காலமாக பரவிய கிசுகிசுக்கள் குறித்து அவர் எந்தக் கருத்தையும் வெளிப்படையாகக் கூறவில்லை. மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியபோது இந்தப் பேச்சுகள் அதிகரித்தாலும், அந்த நபர் யாரென்று அனுபமா வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.
