காட்டுத்தீ வேகமாகப் பரவுகிறது: பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசரநிலை பிரகடனம்

காட்டுத்தீ

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக மாகாண அரசு அவசரநிலையை அறிவித்துள்ளது.

காட்டுத்தீயின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் ஈபி தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (08) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், காட்டுத்தீயை கட்டுப்படுத்தவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

காட்டுத்தீ காரணமாக பலர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆதரவு தெரிவித்துள்ளார்.

நிலைமை மேலும் மோசமடைந்தால், காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கும் ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும் மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், காட்டுத்தீயால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net