ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு தங்களின் ராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை என்று ஸ்பெயின் அரசு தெளிவாக அறிவித்துள்ளது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க போர் விமானங்கள் வேறு தளங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் தரப்பும் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில், தாக்குதல்களை தீவிரப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா, ஸ்பெயினின் ரோடா மற்றும் மோரோன் ராணுவ தளங்களில் நிறுத்தப்பட்டிருந்த தனது போர் விமானங்களை பயன்படுத்த திட்டமிட்டது. ஆனால், ஐநா சாசனத்துக்கு முரணான எந்த நடவடிக்கைக்கும் தங்கள் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று ஸ்பெயின் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பெரெஸ், “ஐநா சாசனத்துக்கு எதிரான எந்த செயலுக்கும் ஸ்பெயின் நிலப்பரப்பு பயன்படுத்தப்படாது” என்று வலியுறுத்தினார்.
நேட்டோ கூட்டமைப்பில் இரு நாடுகளும் உறுப்பினர்களாக உள்ள நிலையில், இந்த முடிவு அமெரிக்காவுக்கு தூதரக ரீதியாக சவாலாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அமெரிக்கா தனது போர் விமானங்களை ஸ்பெயினிலிருந்து மாற்றி அமைத்துள்ளது.
மேலும் செய்திகள்





