ஸ்பெயினில் இளைஞன் ஒருவர் விமானத்தின் மேல் ஏறி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரின் நடவடிக்கையால் விமான சேவை சுமார் இரண்டு மணி நேரம் தாமதமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோக்களில் அந்த இளைஞன் விமானத்தின் கூரை மீது நடந்து ஓடுவதும் தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும், அவர் அங்கிருந்து ஒரு பொருளை கீழே வீசுவதும் காணப்படுகிறது.
24 வயதுடைய அந்த இளைஞன் சுமார் 10 நிமிடங்கள் விமானத்தின் மேல் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக கீழே இறக்கியனர். அவரிடம் இருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
அந்த இளைஞன் ஏன் விமானத்தின் மீது ஏறினார் என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. அவரை மனநல பரிசோதனைக்காக அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆரம்ப விசாரணையில் அந்த இளைஞன் விமான நிலைய முனையத்திற்கு வந்திருந்ததும், அனுமதி இல்லாமல் விமானங்கள் நிறுத்தப்படும் பகுதிக்குள் சென்றதும் தெரியவந்துள்ளது.

