இந்தியாவில் காவல் துறை மற்றும் இராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் பெரும்பாலும் உளவாளிகளுக்கு கிடைப்பதில்லை. அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் ரகசியமானவை என்பதால், அவர்கள் செய்த தியாகங்கள் பல சமயங்களில் வெளிச்சத்திற்கு வருவதில்லை. அத்தகைய இந்தியா மறந்த வீராங்கனைகளில் முக்கியமானவர் இந்தியாவின் முதல் பெண் உளவாளியாக கருதப்படும் நீரா ஆர்யா.
பல ஆண்டுகள் கழித்து தற்போது அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நீரா ஆர்யா 1902 ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி பாக்பத் மாவட்டத்தில் உள்ள கேக்ரா நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். புகழ்பெற்ற தொழிலதிபராக இருந்த அவரது தந்தை சேத் சஜ்ஜுமால், தனது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைக்க கொல்கத்தாவில் படிக்க ஏற்பாடு செய்தார். சிறுவயது முதலே நாட்டின் நலனில் அக்கறை கொண்டிருந்த நீரா, தனது கல்வியை முடித்த பிறகு ஆசாத் ஹிந்த் ஃபௌஜில் இணைந்து ராணி ஜான்சி ரெஜிமென்ட்டில் வீராங்கனையாக பணியாற்றினார்.
நீராவின் தந்தை அவருக்கு திருமணம் செய்து வைத்தவர் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியும் இந்தியாவில் சிஐடி அதிகாரியாக பணியாற்றிய ஸ்ரீகாந்த் ஜெய் ரஞ்சன் தாஸ். ஆனால் இருவருக்கும் அரசியல் சித்தாந்தங்களில் பெரிய வேறுபாடு இருந்ததால் திருமண வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. நீரா நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படையில் இணைந்திருந்தது அவரது கணவருக்கு தெரிய வந்தபோது, அவர் நேதாஜியின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள நீராவை விசாரிக்க தொடங்கினார்.
ஒரு நாள் நீரா நேதாஜியை சந்திக்கச் சென்றபோது, அவரது கணவர் துப்பாக்கியால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த தாக்குதலில் நேதாஜியின் ஓட்டுநர் காயமடைந்தார். சூழ்நிலையின் ஆபத்தை உணர்ந்த நீரா, தயங்காமல் தனது கணவரை கத்தியால் தாக்கி கொன்று நேதாஜியின் உயிரைக் காப்பாற்றினார். இதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவரை கைது செய்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள செல்லுலார் சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களையும் சுபாஷ் சந்திர போஸையும் பற்றிய தகவல்களை வழங்கினால் விடுதலை வழங்கப்படும் என்று பலமுறை கூறப்பட்டாலும், நீரா அதை மறுத்தார். வரலாற்று குறிப்புகளின் படி, தகவல்களை தெரிவிக்க மறுத்ததால் அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் அவர் தனது தேசப்பற்றை விடாமல் பாதுகாத்தார். இதன் காரணமாகவே ஆசாத் ஹிந்த் ஃபௌஜின் முதல் பெண் உளவாளி என்ற பெருமை அவருக்கு வழங்கப்பட்டது.
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. தனது வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் அவர் பூக்கள் விற்று வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள ஃபாலக்னுமா பகுதியில் ஒரு எளிய குடிசையில் வாழ்ந்த அவர், 1998ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி உஸ்மானியா மருத்துவமனையில் உயிரிழந்தார். தற்போது அவரது வாழ்க்கை வரலாறு ரூபா ஐயர் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்





