இலங்கையின் தலைநகர் கொழும்பில் சொந்தமாக ஒரு வீடு அல்லது தொடர்மாடி குடியிருப்பு வாங்குவது இப்போது பலருக்கும் கனவாகவே மாறியுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான Numbeo சொத்து முதலீட்டு சுட்டெண்ணின் அண்மைய தரவுகளின்படி, உலகிலேயே வீடு வாங்க மிகவும் கடினமான நகரமாக கொழும்பு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் வீட்டு விலைக்கும் மக்களின் வருமானத்திற்குமான விகிதம் 55.1 ஆக பதிவாகியுள்ளது. இது உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட 395 நகரங்களில் மிக உயர்ந்த அளவாகும். இந்தப் பட்டியலில் நேபாளத்தின் காத்மாண்டு மற்றும் பிலிப்பைன்ஸின் மணிலா ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மும்பை, சிங்கப்பூர் போன்ற நகரங்களைவிடவும், கொழும்பில் வீடு வாங்குவது சாதாரண மக்களுக்கு இன்னும் கடினமானதாக மாறியுள்ளது.
இதற்குக் காரணமாக, கொழும்பில் வாழும் ஒரு சராசரி குடும்பத்தின் வருமானத்துக்கும் அங்குள்ள நிலம் மற்றும் வீடுகளின் விலைக்கும் இடையே காணப்படும் பெரும் இடைவெளி சுட்டிக்காட்டப்படுகிறது. நகரில் ஒருவரின் சராசரி மாத வருமானம் சுமார் 70 ஆயிரம் ரூபாயாக இருக்கும் நிலையில், நகர மையப் பகுதியில் ஒரு சதுர அடிக்கான நிலத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாயைத் தாண்டுகிறது. இதனால், ஒரு நபர் தனது முழு மாத சம்பளத்தைக் கொடுத்தாலும் கூட, ஒரு சதுர அடி நிலத்தைக் கூட வாங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
வீடு வாங்க முடியாத நிலை காரணமாக, அதிகமான மக்கள் வாடகை வீடுகளை நாடத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக, கொழும்பில் வாடகைக் கட்டணங்கள் வேகமாக உயர்ந்துள்ளன. ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் சராசரி மாத வாடகை, ஒரு சராசரி ஊழியரின் மாதச் சம்பளத்தை விடவும் இருமடங்கு அதிகமாக உள்ளது.
மேலும், உயர்ந்து வரும் சொத்து விலைகள் மற்றும் சுமார் 13 சதவீதமாக இருக்கும் வங்கிக் கடன் வட்டி வீதங்கள் காரணமாக, கொழும்பில் நடுத்தர வர்க்கத்தினர் சொந்த வீடு வாங்குவது என்பது புள்ளிவிபர ரீதியாக ஷங்காய், ஹொங்கொங் அல்லது மும்பையை விடவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.


