சீனாவின் மிகப் பிரபலமான ஓவியர்களில் ஒருவரான 87 வயதுடைய பேன் செங் (Fan Zeng), தனது 37 வயது மனைவி சூ மெங் (Xu Meng) உடன் ஒரு புதிய மகனுக்குத் தந்தையாகி இருப்பதாக அறிவித்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.
இந்த அறிவிப்பு மட்டுமல்லாமல், இந்தப் புதிய குழந்தையே தனது “ஒரே மகன்” எனவும், முந்தைய குழந்தைகளுடனான அனைத்து உறவுகளையும் முற்றிலும் துண்டித்துக் கொள்வதாகவும் அவர் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரது மகள், வளர்ப்பு மகன் மற்றும் அவர்களது குடும்பங்களுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும், அவர்கள் தனது பெயரைப் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் தெளிவாக அறிவித்துள்ளார்.
மேலும், சிலர் வேண்டுமென்றே தனது குடும்பத்தைப் பற்றி பொய்யான வதந்திகளைப் பரப்புவதாகவும், அதை யாரும் நம்பக் கூடாது எனவும் பேன் செங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேன் செங், சீன ஓவியம் மற்றும் காலிகிராபியில் உலக அளவில் மதிக்கப்படும் கலைஞர். அவரது படைப்புகள் பல முறை கோடிகளில் ஏலம் போனது உள்ளிட்ட சாதனைகளைப் படைத்தவை. அவரது கலை மட்டுமல்லாமல், அவரது சொத்து மற்றும் கலை நிறுவன உரிமைகளும் பெருமதிப்பு வாய்ந்தவை.
இந்த அறிவிப்பு, வாரிசுரிமை, குடும்ப உரிமைகள் மற்றும் கலை நிறுவனத்தின் எதிர்காலம் குறித்த பெரிய சர்ச்சைக்கு வித்திடுகிறது. முந்தைய பிள்ளைகள் இந்த முடிவை சட்டப்போராட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
87 வயதில் புதிய வாழ்க்கையைத் துவங்கும் பேன் செங்கின் இந்த முடிவு, கலை உலகம் மட்டுமல்லாமல், பொது மக்களிடையேயும் உறவு, வயது, செல்வம் மற்றும் தனிமை ஆகியவற்றைப் பற்றிய ஆழமான விவாதங்களை உருவாக்கியுள்ளது.
மேலும் செய்திகள்





