அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில், திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணமகன் மற்றும் ஹெலிகாப்டர் பைலட் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேவ் பிஜிக்கும், ஜெஸ்னி என்பவருக்கும் டாசன்வில்லில் உள்ள ‘தி ரெவியர்’ என்ற திருமண மண்டபத்தில் சுமார் 400 விருந்தினர்கள் முன்னிலையில் மிகப் பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. டேவ் பிஜி டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் துணை விமானியாகப் பணியாற்றி வந்தார்.
ஜெஸ்னி ஒரு செவிலியர். திருமணக் கொண்டாட்டங்கள் அனைத்தும் முடிந்த பிறகு, மணமக்கள் இருவரும் தங்களது தேனிலவுக் கொண்டாட்டத்திற்காக அட்லாண்டா நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். இதற்காக அவர்களுக்கு ஒரு சிறப்பு வழியனுப்புதலாக, திருமண மேடையின் அருகிலிருந்தே டி கால்ப்-பீச் ட்ரீ விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் ராபின்சன் R66 ரக ஹெலிகாப்டர் ஒன்றில் இருவரும் புறப்பட்டனர்.
மணமக்கள் பயணித்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அடர்ந்த வனப்பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குப் பின் மயக்கம் தெளிந்து பார்த்த ஜெஸ்னி, தன் மார்பின் மீது சாய்ந்திருந்த கணவர் டேவ்வின் உடல் குளிர்ந்து போயிருந்ததையும், அவர் உயிரிழந்துவிட்டதையும் உணர்ந்தார்.
விபத்து நடந்து சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளுக்கு இடையே சிக்கித் தவித்த மணமகள் ஜெஸ்னி, பின்னர் மீட்கப்பட்டு அட்லாண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, ஜெஸ்னிக்கு எலும்பு முறிவுகள் எதுவும் இல்லாமல், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து நடப்பதற்கு முன்பு, அங்கு பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் வானிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனைக் கவனித்த மணமகன் டேவ், ‘பூஜ்ஜிய தெரிவுநிலை (Zero Visibility) இருக்கும்போது நாங்கள் விமானத்தை இயக்க மாட்டோம். தற்போதைய சூழல் பறப்பதற்கு உகந்தது அல்ல’ என்று பைலட்டிடம் தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதற்கு அந்த ஹெலிகாப்டர் பைலட், ‘நாம் சற்றுக் கூடுதல் உயரத்தில் பறக்கலாம்’ என்று கூறி ஹெலிகாப்டரை இயக்கியதாக, சிகிச்சையில் இருக்கும் ஜெஸ்னி தெரிவித்துள்ளார். இந்தக் கோர விபத்து குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும் செய்திகள்



