ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளால் சவூதி அரேபியாவின் ஒரே உத்தியோகபூர்வ மதுபான விற்பனை நிலையத்தில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரியாத்தின் இராஜதந்திரப் பகுதியில் பெயர் பலகை இல்லாமல் இயங்கும் இந்த விற்பனை நிலையம், 2024 ஆம் ஆண்டு முஸ்லிம் அல்லாத இராஜதந்திரிகளுக்காகத் தொடங்கப்பட்டது.
கடந்த ஆண்டு முதல் வசதி படைத்த முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுக் குடியிருப்பாளர்களுக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டு முதல் சவூதியில் மதுபானங்களுக்குத் தடை இருந்தாலும், வெளிநாட்டவர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த ஒரு நிலையத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய விநியோகத் தடையால் பியர், ஒயின் மற்றும் டெகிலா உள்ளிட்ட பானங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, அதிகம் அறியப்படாத அல்லது விலை உயர்ந்த பிராண்டுகள் மட்டுமே விற்பனைக்கு உள்ளதாக அங்கு சென்றவர்கள் தெரிவித்தனர்.
இதனால் நிலையத்தின் வெளியே நீண்ட வரிசைகள் காணப்படுவதோடு, பகல் நேரங்களிலேயே மதுபானங்களை வாங்க முற்படும் வெளிநாட்டவர்களிடையே வாக்குவாதங்களும் மோதல்களும் அவ்வப்போது ஏற்படுவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வர வேண்டிய சரக்குக் கப்பல்கள் ஈரான் போர் பதற்றம் காரணமாகத் தாமதமாவதே இந்தத் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

