பிரிட்டன் அரசு, தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு வேலை விசா வழங்குவதும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, குடியேற்ற மற்றும் தஞ்சம் கோரிக்கை முறைகளில் தவறான பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
Home Office வெளியிட்ட தகவலின்படி, 2021 முதல் இதுவரை சட்டப்பூர்வமான வழிகளில் சுமார் 1,35,000 பேர் பிரிட்டனில் நுழைந்து தஞ்சம் கோரியுள்ளனர். குறிப்பாக, இந்த நான்கு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் தஞ்சம் கோரிக்கை 2021 முதல் 2025 வரை 470 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை செயலாளர் Shabana Mahmood கூறுகையில், “போர் மற்றும் துன்புறுத்தலிலிருந்து தப்பிச் செல்வோருக்கு பிரிட்டன் எப்போதும் பாதுகாப்பளிக்கும். ஆனால் எங்கள் விசா முறையை யாரும் தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது. அதனால் தான் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளோம்,” என்றார்.
குடியேற்றம் தொடர்பான விவகாரம் பிரிட்டன் அரசியலில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், குடியேற்ற எதிர்ப்பு கொள்கையுடன் செயல்படும் Reform UK கட்சி கருத்துக்கணிப்புகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும், English Channel வழியாக பிரான்ஸிலிருந்து சிறிய படகுகள் மூலம் வரும் சட்டவிரோத குடியேற்றத்தையும் கட்டுப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.
2025ஆம் ஆண்டில் மாணவர் விசா மூலம் வரும் தஞ்சம் கோரிக்கைகள் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தாலும், கல்வி விசா மூலம் வருவோர் இன்னும் மொத்த விண்ணப்பங்களில் 13 சதவீதம் உள்ளதாகவும், இதை மேலும் குறைக்க கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

