நேபாளத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து: 19 பேர் பலி!

Bus carrying tourists crashes in Nepal

நேபாளத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், 24 வயது இங்கிலாந்து ஒருவர் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பஸ் பொகாராவிலிருந்து (Pokhara) தலைநகர் காத்மாண்டுவிற்குச் சென்று கொண்டிருந்தபோது, திதிங் (Dhading) மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து, திரிசூலி ஆற்றின் கரையில் சுமார் 200 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது பஸ் ஓட்டுநர் உட்பட 44 பேர் இருந்தனர், அவர்களில் 25 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த 19 பேரின் உடல்களையும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இதில் 40 வயதுடைய சீனப் பெண் ஒருவரும், 32 வயதுடைய இந்திய ஆண் ஒருவரும் அடங்குவர்.

காயமடைந்தவர்களில் ஒரு சீன நாட்டவரும் ஒரு நியூசிலாந்து நாட்டவரும் உள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தலைநகரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த நேபாள உள்துறை அமைச்சகம் ஐந்து பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்துள்ளது. மீட்புப் பணிகளில் காவல்துறை, இராணுவம் மற்றும் மூழ்காளர் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன.

நேபாளத்தில் வீதிப் பராமரிப்புக் குறைபாடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள குறுகிய பாதைகள் காரணமாக வீதி விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதற்கு முன்னதாக 2024ஆம் ஆண்டிலும், பொகாராவிலிருந்து காத்மாண்டு சென்ற பஸ் ஒன்று ஆற்றில் விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.

நேபாளம், சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு, குறிப்பாக எவரெஸ்ட் உள்ளிட்ட இமயமலை சிகரங்களுக்குச் செல்லும் மலையேற்ற வீரர்களுக்கு மிகவும் பிரபலமான இடமாகும். மலையேற்றம் அந்நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. 2024ஆம் ஆண்டில் மலையேற்றக் கட்டணம் மூலம் மட்டும் சுமார் $5.9 மில்லியன் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net