இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதியான லிண்ட்சே ஃபோர்மேன் மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் ஆகியோர் ஈரான் நாட்டில் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தம்பதியர், 2025ஆம் ஆண்டு உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றிப் பார்க்கும் பயணத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ஈரான் வழியாக சென்றபோது, அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த குற்றச்சாட்டுகளை தம்பதியர் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பின்னர், அவர்கள் தற்போது Evin Prison சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறை, அரசியல் கைதிகள் மற்றும் வெளிநாட்டவர்களை அடைப்பதற்காகப் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முன்பே குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரான் அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் Yvette Cooper, இதை “முற்றிலும் பயங்கரமானதும், எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததும்” என தெரிவித்துள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட தம்பதியர் பாதுகாப்பாக இங்கிலாந்து திரும்புவதற்காக பிரிட்டன் அரசு தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்தச் சம்பவம், ஈரான் மற்றும் மேற்கு நாடுகளுக்கிடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

