பிரிட்டன் வெளியுறவு செயலராக உள்ள டேவிட் லம்மி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) இலங்கைக்கு குறுகிய கால உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயம் இருநாட்டு உறவுகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய முயற்சிகள் ஆகியவற்றை மையப்படுத்தியதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தங்கும் காலத்தில், அவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் முக்கிய இருதரப்பு சந்திப்புகளில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக, சில தமிழ் அரசியல் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விஜயத்தின் முக்கிய அம்சமாக “குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான உலகளாவிய சாசனம்” (Charter for the Global Campaign on Children’s Care) குறித்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் நிகழ்வும் இடம்பெற உள்ளது. அதேபோல், ஐக்கிய நாடுகள் அமைப்பு அலுவலகத்தில் நடைபெறும் “Global Charter on Children’s Care Reform” நிகழ்விலும் அவர் பங்கேற்பார்.
காலை இலங்கையை வந்தடையும் டேவிட் லம்மி, நிர்ணயிக்கப்பட்ட சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளை முடித்த பின்னர், அதே நாளான 17ஆம் திகதி மாலை நாடு திரும்பவுள்ளார்.

