பிரித்தானியாவில் செயல்படும் சசெக்ஸ் மருத்துவமனை அறக்கட்டளையில் வழங்கப்பட்ட மகப்பேறு சிகிச்சையில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக தங்கள் குழந்தைகளை இழந்ததாக பல பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பிபிசி செய்தி நிறுவனம் விரிவாக தகவல்களை வெளியிட்டுள்ளது.
பெத் கூப்பர் மற்றும் சோஃபி ஹார்ட்லி உள்ளிட்ட சில தாய்மார்கள், மருத்துவப் பராமரிப்பில் ஏற்பட்ட தவறுகளால் தங்களது குழந்தைகளை இழந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் சுதந்திரமான விசாரணையை முன்னெடுத்து வருகிறது. விசாரணை தற்போது 15 குடும்பங்களின் புகார்களையும் உள்ளடக்குமாறு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், 2019 முதல் 2023ஆம் ஆண்டுக்குள் சரியான சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் குறைந்தது 55 புதிதாகப் பிறந்த குழந்தைகளை காப்பாற்றியிருக்கலாம் என தெரிவிக்கின்றன.
பெத் கூப்பர் தனது குழந்தையின் அசைவுகள் குறைந்திருப்பதாக தொடர்ந்து மூன்று நாட்கள் மருத்துவமனைக்கு சென்றபோதும், அவர் முதல் முறையாக தாயாக இருப்பதால் தேவையற்ற பதட்டம் அடைந்திருப்பதாகக் கூறி மருத்துவப் பணியாளர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது குழந்தை உயிரிழந்தது.
சோஃபி ஹார்ட்லி பலமுறை மருத்துவமனையைத் தொடர்புகொள்ள முயன்றபோதும் உரிய பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டாலும் அவரது குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.
மேலும், கிளோவி வோவல்ஸ்-லெவெட் என்ற தாய், கடும் வலியால் அவதிப்பட்ட போதும் மருத்துவமனை தூண்டப்பட்ட பிரசவத்தை மேற்கொள்ள மறுத்ததால் தனது மகளை இழந்ததாக தெரிவித்துள்ளார். தாயின் கவலைகளை புறக்கணித்ததுடன், இயற்கை பிரசவத்தை முன்னிலைப்படுத்திய மருத்துவமனையின் அணுகுமுறையும் இவ்வாறான உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகப்பேறு சிகிச்சை குறைபாடுகள் தொடர்பாக சசெக்ஸ் மருத்துவமனை அறக்கட்டளை 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் £103.8 மில்லியன் இழப்பீடாக வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டில் பிரித்தானியாவில் வழங்கப்பட்ட அதிகபட்ச இழப்பீடாகக் கருதப்படுகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி டாக்டர் ஆண்டி ஹீப்ஸ் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த 40 கூடுதல் செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், தங்கள் குழந்தைகளின் உயிரிழப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உறுதியுடன் உள்ளன.


