கனடாவில் இடம்பெற்ற கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் தொலைதூர பகுதியில் உள்ள டம்ப்லர் ரிட்ஜ் செக்கண்டரி பள்ளியில் நடந்த இந்த தாக்குதலில், தாக்குதல் நடத்திய நபர் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பள்ளி வளாகத்திலேயே ஆறு பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் உடலும் பள்ளி வளாகத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. அருகிலுள்ள ஒரு வீட்டுக்குள் மேலும் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் இருவரின் நிலைமை உயிருக்கு ஆபத்தானதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 2,400 மக்கள் வசிக்கும் டம்ப்லர் ரிட்ஜ் நகரம் வான்கூவர் நகரத்திலிருந்து 600 மைல்களுக்கு மேல் தொலைவில், ஆல்பெர்டா மாகாண எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. சம்பவத்திற்குப் பிறகு மதியம் 1.20 மணியளவில் அப்பகுதி மக்களுக்கு செயலில் இருக்கும் துப்பாக்கிச் சூடு குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தாக்குதல் நடத்திய நபர் பழுப்பு நிற முடி கொண்ட பெண் என்று ஆரம்பத்தில் தகவல் வெளியிடப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சந்தேக நபர் அந்த விவரணைக்கு பொருந்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரின் அடையாளத்தை அதிகாரிகள் அறிந்திருந்தாலும், இதுவரை பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை.
பள்ளி மற்றும் அருகிலுள்ள வீட்டில் நடந்த சம்பவங்களுக்கு இடையிலான தொடர்பு இன்னும் உறுதியாகவில்லை. மேலும் எந்த வகையான ஆயுதம் பயன்படுத்தப்பட்டது, தாக்குதலுக்கான காரணம் என்ன என்பதையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
இந்த சம்பவத்தை கனடா பிரதமர் மார்க் கார்னி மிகுந்த துயரமானதாக வர்ணித்துள்ளார். சம்பவத்திற்குப் பிறகு ஜெர்மனிக்கு மேற்கொள்ள இருந்த தனது பயணத்தையும் அவர் ரத்து செய்துள்ளார். சம்பவம் நடந்த பகுதி மிகவும் தொலைதூரமானது என்பதால், அங்கிருந்து தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் குறைவாகவே கிடைத்துவருகின்றன.








