பிரித்தானியா – லெய்செஸ்டர் நகரில் டி மாண்ட்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் 20 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக 18 வயது இளைஞன் ஒருவரை கொலை குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் ஆக்ஸ்போர்டு தெரு மற்றும் போனர்ஸ் வீதி சந்திப்பில் இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதில் கத்திக்குத்துக்கு உள்ளான இளைஞன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை மீட்க மருத்துவ ஊழியர்கள் மேற்கொண்ட தீவிர சிகிச்சை முயற்சிகள் பலனளிக்காமல், பின்னர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து லெஸ்டர்ஷையர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதுடன், சாட்சிகளிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்த இளைஞனுக்கு உதவி செய்ய முயன்ற பொதுமக்களுக்கு காவல்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து இதுவரை தகவல் வழங்காத சாட்சிகள் முன்வருமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் லெய்செஸ்டர் நகர மையத்தில் ஆக்ஸ்போர்டு தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. லெய்செஸ்டர் ராயல் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளும் பணியாளர்களும் கூடுதல் நேரத்தை ஒதுக்கி பயணத் திட்டங்களை அமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள் அடையாள அட்டையை காட்டிய பிறகே வாகன நிறுத்துமிடத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த சில நாட்களில் கூடுதல் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பொதுமக்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

