ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள K’Gari Island கடற்கரையில், டிங்கோ நாய்கள் சூழ்ந்த நிலையில் 19 வயதான கனடிய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திங்கள்கிழமை காலை சுமார் 6.30 மணியளவில் நடந்ததாக குயின்ஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
கடற்கரையில் வாகனத்தில் சென்ற இரண்டு ஆண்கள், சுமார் 10 டிங்கோ நாய்கள் ஒரு பொருளைச் சுற்றி இருந்ததை கவனித்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது அது ஒரு பெண்ணின் உடல் என்பது தெரியவந்ததாக காவல்துறை ஆய்வாளர் பால் ஆல்ஜி உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த மரணம் நீரில் மூழ்கியதா அல்லது டிங்கோ நாய்களின் தாக்குதலால் ஏற்பட்டதா என்பது குறித்து தற்போது உறுதியாக கூற முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், உடலில் டிங்கோ நாய்கள் தொட்டதும் இழுத்துச் சென்றதற்கான அடையாளங்கள் இருப்பதாக ஆய்வாளர் கூறியுள்ளார். இந்தக் காட்சி அதை கண்டவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு வாரங்களாக ஒரு பேக்க்பேக்கர் விடுதியில் பணியாற்றி வந்த அந்த பெண், அதிகாலை 5 மணிக்கு நீச்சல் செல்ல இருப்பதாக நண்பர்களிடம் கூறியிருந்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அழகான சுற்றுலா பகுதியில் நேர்ந்த இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இறந்த பெண்ணின் உடல், 1935ஆம் ஆண்டு கரை ஒதுங்கிய மகேனோ கப்பல் இடிபாடுகள் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. இந்த பகுதி டிங்கோ நாய்கள் அதிகம் காணப்படும் வனப்பகுதியாகும். அவை குயின்ஸ்லாந்து தேசிய பூங்காக்களில் பாதுகாக்கப்படும் நாட்டுப்புற வனவிலங்குகள் ஆகும்.
இந்த தீவு ஒரு இயற்கை வனப்பகுதி என்பதால், டிங்கோ நாய்களை அணுக வேண்டாம் என்றும், அவை பண்பாட்டு முக்கியத்துவம் கொண்டவை என்றாலும் வனவிலங்குகளாகவே கருதப்பட வேண்டும் என்றும் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான உடற்கூறு பரிசோதனை புதன்கிழமை நடைபெற உள்ளது.
மேலும் செய்திகள்





