2026ஆம் ஆண்டில் பிரித்தானியாவுக்கு பயணிக்க உள்ளவர்களுக்கு முக்கியமான ஒரு பயனுள்ள தகவலை பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ளது. இனி பாரம்பரிய விசா ஸ்டிக்கர்களுக்கு பதிலாக, முழுமையாக டிஜிட்டல் eVisa முறைக்கு மாறும் நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.
பிரித்தானியாவின் விசா மற்றும் புலம்பெயர்தல் அமைப்பான UK Visas and Immigration (UKVI), குடியேற்ற அமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் இந்த மாற்றத்தை அமல்படுத்துகிறது. இதன் மூலம், அடையாளம் மற்றும் குடியேற்ற நிலையை நிரூபிக்க இதுவரை பயன்படுத்தப்பட்ட காகித ஆவணங்கள் மற்றும் விசா ஸ்டிக்கர்களுக்கு பதிலாக, ஒரே ஒரு டிஜிட்டல் ஆவணமாக eVisa பயன்படுத்தப்படும்.
இந்த மாற்றத்திற்கான இடைக்கால கட்டமாக, 2026 ஜனவரி 12ஆம் திகதி விசா பெற்ற பலருக்கு, ஒரே நேரத்தில் eVisa மற்றும் பாரம்பரிய விசா ஸ்டிக்கர் இரண்டும் வழங்கப்பட்டுள்ளன. இது, காகித அடிப்படையிலான முறையிலிருந்து முழுமையான டிஜிட்டல் முறைக்கு மாறும் இடைநிலைக் காலமாகும்.
அரசின் திட்டமிடலின்படி, 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, விசா ஸ்டிக்கர்களை வழங்குவதை UKVI முழுமையாக நிறுத்தும். அதன்பின், பிரித்தானியாவுக்குள் நுழைவு, தங்கும் உரிமை மற்றும் குடியேற்ற நிலை ஆகிய அனைத்திற்கும் eVisa மட்டுமே செல்லுபடியாகும். இந்த மாற்றம் பயணிகள் மற்றும் குடியேற்ற விண்ணப்பதாரர்களுக்கு அதிக வசதியும் பாதுகாப்பும் வழங்கும் என அரசு தெரிவித்துள்ளது.







