சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மோன்டானா பகுதியில் உள்ள ஸ்கி விருந்தகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், மேலும் 16 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சுவிட்சர்லாந்து, இத்தாலி, ரோமேனியா, துருக்கி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் தங்கியிருந்த நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

விருந்தக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு எதிராக அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறி குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தீ பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இந்த தீ விபத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு மற்றும் அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

