இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், 2017 முதல் தேசிய அணிக்காக விளையாடி வருகிறார். காயங்கள் காரணமாக ஆரம்ப ஆண்டுகளில் தொடர்ச்சியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும், 2021 காபா டெஸ்ட் போட்டியில் முக்கிய பங்களிப்பு நிகழ்த்தி தன்னை நிரூபித்தார். கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, சுந்தருக்கு மூன்று வடிவங்களிலும் நிலையான வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
குறிப்பாக, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் தொடரை சமன் செய்ய உதவிய அவர், அண்மையில் 2026 டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஹோட்டல் அறையிலிருந்து வெளியேறும் சுந்தரை சில ரசிகர்கள் புகைப்படம் எடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவர் உடனடியாக “வேண்டாம்” என்று மறுத்து, முகத்தை மறைத்தபடி விலகிச் செல்கிறார்.
இதைப் பார்த்த சில ரசிகர்கள், “இந்திய அணிக்காக பெரிய அளவில் சாதிக்காமல் இருக்கும் இவருக்கே இவ்வளவு திமிரா?” என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “எங்கள் ஆதரவின்றி உங்களுக்கு இந்த அளவு புகழ் கிடைத்திருக்குமா?” என்றும அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால், மற்றொரு தரப்பு ரசிகர்கள் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். “அவர் கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும்போது ரசிகர்களுடன் பலமுறை புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். வேண்டிய இடங்களில் ஆட்டோகிராப் கொடுத்தும் உள்ளார்” என்று நினைவூட்டுகின்றனர். மேலும், “தனிப்பட்ட நேரத்தில் ஒரு வீரருக்கும் தனியுரிமை தேவை. வேண்டாம் என்று சொல்லியும் அவரை சூழ்ந்து புகைப்படம் எடுக்க முயற்சிப்பது மரியாதைக்குரியதல்ல” என்று வாதிடுகின்றனர்.

