பாக்ஸிங் டே தினத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரு தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இங்கிலாந்தின் குளோஸ்டர்ஷையர் (Gloucestershire) மாகாணத்தில் உள்ள ஸ்ட்ரவுட் (Stroud) பகுதியின் பிரிம்ஸ்கோம் ஹில் (Brimscombe Hill) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 03 மணியளவில், குறித்த வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ குறித்து அவசர சேவைகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. தீ வேகமாக பரவிய நிலையில், 40 வயது தாய், 07 வயது மகள் மற்றும் 04 வயது மகன் வீட்டுக்குள் சிக்கிக்கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை தாயின் உடலும் ஒரு குழந்தையின் உடலும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வ அடையாளம் காணும் பணிகள் முடியவில்லை. மற்றொரு குழந்தையின் உடலை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. ஆனால், வீடு மிகவும் சேதமடைந்து, உறுதியற்ற நிலையில் இருப்பதால், மீட்புப் பணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த தீ விபத்தில் தந்தை உயிர்தப்பியுள்ளார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர் குளோஸ்டர்ஷையர் காவல்துறையில் பணியாற்றும் செயலில் உள்ள பொலிஸ் அதிகாரி என்பதும் திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தீ வீட்டின் தரைத்தளத்தில் இருந்து தொடங்கியதாகவும், சம்பவத்தில் எந்த சந்தேகத்திற்கிடமான காரணங்களும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை “மிகவும் துயரமிகுந்த ஒரு நிகழ்வு” என தெரிவித்த டிடெக்டிவ் சூப்பிரிண்டெண்ட் இயன் ப்ளெட்சர், தீ ஏற்பட்ட போது தாயும் தந்தையும் விழித்தெழுந்து, பின்புற படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளைக் காப்பாற்ற முயன்றதாகக் கூறினார்.
தந்தை, குளியலறை ஜன்னல் வழியாக வீட்டிலிருந்து வெளியேறி, பின்னர் குழந்தைகள் இருந்த அறையின் ஜன்னல் வழியாக உள்ளே செல்ல முயன்றார். ஆனால், தீயின் கடும் வெப்பமும் தீவிரமும் காரணமாக அது சாத்தியமாகவில்லை. அதனைத் தொடர்ந்து, மீண்டும் குளியலறை வழியாக வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, தீ முழுமையாகப் பரவி இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



