சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள Lincang பகுதியின் ஒரு கிராமம், திருமணம் தொடர்பான விதிகளுக்காக அபராதங்களை அறிமுகப்படுத்தியது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் பரவிய புகைப்படங்களின்படி, இந்த கிராமம் பல தனித்துவமான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருமணம் ஆகாமல் கருவுற்றால் 3,000 யுவான் (சுமார் 420 அமெரிக்க டாலர்), திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தால் ஆண்டுதோறும் 500 யுவான் (70 டாலர்) அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், யுன்னான் மாகாணத்திற்கு வெளியே உள்ள ஒருவரைத் திருமணம் செய்தால் 1,500 யுவான் (210 டாலர்) அபராதம்; திருமணமான 10 மாதங்களுக்குள் குழந்தை பிறந்தால் 3,000 யுவான் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டது.
குடும்ப சண்டைகளில் கிராம அதிகாரிகள் மத்தியஸ்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், இரு தரப்பினருக்கும் தலா 500 யுவான் அபராதம். மது அருந்தி முரட்டுத்தனமாக நடந்து கொள்பவர்களுக்கு 3,000 முதல் 5,000 யுவான் வரையும், வதந்திகள் அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புபவர்களுக்கு 500 முதல் 1,000 யுவான் வரையும் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களில் வைரலானது. இது குறித்து மெங்டிங் நகர அரசாங்கத்தின் ஒரு அதிகாரி, ரெட் ஸ்டார் நியூஸ் இணையத்தளத்திடம் பேசுகையில், “இந்த அறிவிப்பு மிகவும் அசாதாரணமானது” என்றும், அது ஏற்கனவே அகற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும், “இந்த அறிவிப்பு கிராமக் குழுவால் தன்னிச்சையாக வெளியிடப்பட்டது. இது நகர அரசாங்கத்திடம் முன்னரே தெரிவிக்கப்படவில்லை அல்லது ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவில்லை” என்று விளக்கினார்.
கிராமத்தின் மக்கள்தொகை, பொருளாதார நிலை போன்ற விவரங்கள் இன்னும் தெளிவாக வெளியாகவில்லை.


