தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஐசிசி டி20ஐ தரவரிசையில், இந்திய வீரர்களின் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் மிகவும் சோகமாக அமைந்தது, கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டர் தரவரிசையில் முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறியுள்ளார் என்பது தான்.
தொடரில் நான்கு போட்டிகளில் மொத்தம் 34 ரன்கள் மட்டுமே எடுத்து, 8.50 சராசரி மற்றும் 103.03 ஸ்ட்ரைக் ரேட் கொண்ட சூர்யா, மூன்று இடங்கள் சரிந்து 13வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்தத் செயல்பாடு, அவரது தரவரிசையில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு நேர்மாறாக, சூர்யாவின் மும்பை இந்தியன்ஸ் சக வீரர் திலக் வர்மா தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்கா தொடரில் 187 ரன்கள் குவித்தது இதற்கு முக்கிய காரணம். மேலும், இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா டி20 பேட்டர் தரவரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி, தென்னாப்பிரிக்கா தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி 11.25 சராசரி மற்றும் 7.50க்கும் குறைவான எகானமியுடன் சிறப்பாக செயல்பட்டு, முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். ஜஸ்பிரித் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 18வது இடத்தை எட்டியுள்ளார்.
ஆல்ரவுண்டர் தரவரிசையிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஹர்திக் பாண்டியா தனது நான்காவது இடத்தை தக்கவைத்துக் கொண்டாலும், அக்சர் படேல் ஒரு இடம் சரிந்து 10வது இடத்திற்குச் சென்றார். காயம் காரணமாக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர், பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
சிவம் தூபே ஒரு இடம் சரிந்து 17வது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில், அபிஷேக் ஷர்மா பேட்டிங்கில் 103 ரன்கள் குவித்ததன் மூலம் ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 18வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் செய்திகள்





