கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பிரித்தானியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் இன்று வெள்ளிக்கிழமை (19) இந்த விடுமுறை காலத்தின் மிகப் பரபரப்பான நாளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீதிகளில் சுமார் 2.44 மில்லியன் கார்கள் ஓடும் வாய்ப்பு இருப்பதாக AA எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீதிப் போக்குவரத்து அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பயணங்கள் 100 மைல்களுக்குள் இருப்பதால், நெடுஞ்சாலை சந்திப்புகள் மற்றும் முக்கிய வணிக வளாகங்களுக்கு அருகில் கடும் நெரிசல் உருவாகலாம். “இந்த கிறிஸ்மஸில் பொறுமையே சிறந்த பரிசு” என AA-வின் ரோந்து நிபுணர் ஷான் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இதனை கருத்தில்கொண்டு, பயணிகள் தங்கள் பயணத்திற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள M27 நெடுஞ்சாலையின் சந்திப்பு 9 முதல் 11 வரை கிறிஸ்மஸ் முதல் ஜனவரி 4 வரை மூடப்பட உள்ளது. பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக இந்த மூடல் அமல்படுத்தப்படுவதால், பயணிகள் மாற்று வழிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரயில் பயணத்தைத் தேர்வுசெய்பவர்களுக்கும் முன்கூட்டிய திட்டமிடல் அவசியமாகும். பராமரிப்பு பணிகள் காரணமாக பல ரயில் பாதைகள் மூடப்படவோ அல்லது கட்டுப்படுத்தப்படவோ உள்ளன. கிறிஸ்மஸ் தினத்தன்று ரயில்கள் இயங்காது; பாக்ஸிங் டே அன்று மிகக் குறைந்த அளவிலான சேவைகளே கிடைக்கும் என்பதால், இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமானப் பயணத்தைப் பொருத்தவரை, வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 4.6 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் சோதனையை எளிதாக்க, பொருட்களை மூடி சுற்றாமல் எடுத்துச் செல்லுமாறு பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. காரணம், சோதனைக்காக அவை திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



