தெற்கு பிரேசிலின் குவைபா நகரில் உள்ள ஹவன் என்ற வணிக வளாகத்திற்கு அருகே 24 மீட்டர் உயரம் கொண்ட சுதந்திர தேவி சிலை, நேற்று நிகழ்ந்த பலமான சூறாவளி காற்றினால் சரிந்து விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலை விழுந்த இடம் பரபரப்பான சாலை என்பதால், சம்பவம் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. முன்னரே சூறாவளி குறித்து எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்ததால், பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருந்தனர்.
சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. அதிகாரிகள், சிலை விழுந்த இடத்தில் மீண்டும் அதை நிறுவுவதற்கான திட்டங்களை உருவாக்கி வருவதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற எதிர்பாராத சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

