அபுதாபியில் நடைபெற்று வரும் Indian Premier League 2026 மினி ஏலம், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே கலவையான உணர்வுகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, சிஎஸ்கே அணிக்காக கடந்த சீசன்களில் முக்கிய பங்காற்றிய நியூசிலாந்து வீரர்களை, அடிப்படை விலைக்குக் கூட வாங்காமல் அணி நிர்வாகம் கைவிட்டது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில சீசன்களில் சிஎஸ்கேவின் நம்பகமான ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளங்கிய டெவோன் கான்வே மற்றும் இளம் ஆல்-ரவுண்டராக எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இந்த ஏலத்திற்கு முன்பே விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், ஏலத்தில் அவர்கள் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வலுவாக இருந்தது. குறிப்பாக ரச்சின் ரவீந்திராவை மீண்டும் வாங்குவார்கள் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருந்தது.
இரு வீரர்களுக்கும் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏலத்தில் அவர்களது பெயர் வந்தபோது, சிஎஸ்கே ஏலம் கேட்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிஎஸ்கே மட்டுமல்ல, எந்த அணியும் இவர்களுக்காக ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதன் காரணமாக, கான்வே மற்றும் ரச்சின் இருவரும் விலை போகாத வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றனர். இந்த காட்சி பல ரசிகர்களுக்கு சோகத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
இந்த முடிவுக்கு பின்னால் சிஎஸ்கே எடுத்திருந்த பெரிய திட்டம்தான் காரணம் என சொல்லப்படுகிறது. அதாவது, ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை குறிவைத்து சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டது. கிரீனை வாங்குவதற்காக கொல்கத்தா அணியுடன் சிஎஸ்கே கடுமையான போட்டியில் இறங்கியது. ரூ.25 கோடி வரை செலவிடத் தயாராக இருந்த சிஎஸ்கே, இறுதியில் Kolkata Knight Riders ரூ.25.20 கோடிக்கு ஏலம் எடுத்ததும் பின்வாங்கியது.
ஒருபுறம் கிரீனுக்காக 25 கோடி வரை செல்லத் தயாராக இருந்த அணி, மறுபுறம் தங்களுக்காக முன்பு சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு 2 கோடி கொடுக்க தயங்கியது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. “சிஎஸ்கே ஒரு குடும்பம்” என்று சொல்லப்படும் நிலையில், பழைய வீரர்களை இப்படி புறக்கணித்தது நியாயமா என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
குறிப்பாக ரச்சின் ரவீந்திரா திறமையான இளம் வீரராக இருந்தும் அவரை மீண்டும் எடுக்காதது குறித்து பலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சிஎஸ்கே அணியில் அவருக்கு நிலையான பேட்டிங் இடம் கிடைக்காததே இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். எது எப்படியோ, இந்த ஏலத்தில் சிஎஸ்கே எடுத்த முடிவு, அணியின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றமாகவே மாறியுள்ளது.


