பிரித்தானிய அரசு, கிரிப்டோகரன்சி சந்தையை ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய சட்டங்களை உருவாக்கி வருகிறது. இச்சட்டங்கள் 2027-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கிரிப்டோ தொடர்பான நிறுவனங்கள் பாரம்பரிய நிதி நிறுவனங்களைப் போலவே Financial Conduct Authority (FCA) என்ற கட்டுப்பாட்டு அமைப்பின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்பட வேண்டிய நிலை ஏற்படும்.
டிஜிட்டல் நாணயங்கள் மற்றும் சொத்துக்கள் நுகர்வோருக்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதே அரசின் முதன்மை நோக்கம் என இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் Rachel Reeves கூறினார். அதற்காக, கிரிப்டோ சொத்துகளை “regulatory perimeter” எனப்படும் சட்ட வரம்புக்குள் கொண்டு வருவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புதிய விதிகள் அமுலுக்கு வந்தால், கிரிப்டோ சந்தையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும், முதலீட்டாளர்கள் மோசடிகள், தவறான வாக்குறுதிகள் மற்றும் பாதுகாப்பற்ற பரிமாற்றங்களிலிருந்து சிறந்த பாதுகாப்பைப் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கிரிப்டோ நிறுவனங்களும் வங்கிகள் மற்றும் பங்குச்சந்தை நிறுவனங்கள் பின்பற்றும் தரநிலைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய சூழல் உருவாகும்.
மேலும், இந்தச் சட்டங்களின் மூலம் கிரிப்டோகரன்சி சந்தை ஒரு “சட்டப்பூர்வ நிதி சந்தை” என்ற அங்கீகாரத்தை பெறும். இதனால், பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் நாணயங்களில் முதலீடு செய்யும் பொதுமக்கள் அதிக நம்பிக்கையுடன் செயல்பட முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரித்தானியாவில் கிரிப்டோ சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், 2027 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய சட்டங்கள் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, சந்தையின் நீண்டகால நிலைத்தன்மைக்கும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் பிரித்தானியாவைத் தாண்டி உலகளாவிய கிரிப்டோ சந்தையிலும் உணரப்படக்கூடும்.

