இணைய வழியாக இளைஞர்களை தீவிரவாத நோக்கங்களுக்கு ஈர்க்கும் அமைப்புகளை எதிர்க்கும் வகையில், கனடா அரசு இன்னும் ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுத்துள்ளது. நான்கு புதிய அமைப்புகள் — 764, Maniac Murder Cult, Terrorgram Collective, மற்றும் Islamic State–Mozambique (IS-M) — கனடாவின் குற்றச்சாட்டுச் சட்டத்தின் (Criminal Code) கீழ், சட்டபூர்வமாக “தீவிரவாத அமைப்புகள்” என பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை, கனேடிய மக்கள் மற்றும் சமூகங்களை மிரட்டல், வெறுப்பு, வன்முறை மற்றும் தீவிரவாதத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, இவ்வாறு அறிவித்துள்ளார்.
இந்த பட்டியலிடுதல் மூலம், கனடிய பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகள் — CSIS மற்றும் RCMP — தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்கவும், தடை செய்யவும் வலுவான சட்ட அதிகாரங்களைப் பெற்றுள்ளன. இந்த அமைப்புகள் கனடாவில் வைத்திருக்கும் அனைத்து சொத்துகளும் உடனடியாக முடக்கப்பட்டு, அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட வேண்டும்.
கனடாவில் உள்ளவர்களோ அல்லது வெளிநாடுகளில் உள்ள கனடியர்களோ, இந்த அமைப்புகளுடன் எந்தவிதமான செயலிலும் திட்டமிட்டு ஈடுபடுவது குற்றமாகக் கருதப்படும். அதேபோல், இவ்வமைப்புகளுக்கு பொருளாதார உதவி, சொத்து அல்லது சேவைகளை வழங்குவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் இந்த பட்டியலை குடிவரவு மற்றும் அகதி பாதுகாப்பு சட்டங்களின் பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியும்.
764, Maniac Murder Cult, Terrorgram Collective ஆகியவை, சிந்தனையால் தூண்டப்படும் எல்லை தாண்டிய வன்முறை (Ideologically Motivated Violent Extremism – IMVE) வலைப்பின்னல்களாகும். இவை சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்கள் மூலம் இளைஞர்களை ஈர்த்து, தீவிரவாதம் மற்றும் வன்முறை குறித்த பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன.
குறிப்பாக, 764 அமைப்பை தீவிரவாத பட்டியலில் சேர்த்த உலகின் முதல் நாடாக கனடா விளங்குகிறது. இது குழந்தைகள் உட்பட கனடியர்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், Islamic State–Mozambique (IS-M) என்பது ISIS-இன் அங்கீகரிக்கப்பட்ட கிளை அமைப்பாகும். மொசாம்பிக்கில் செயல்படும் இது, பகுதிகளை கைப்பற்றி, ஷரியா சட்டத்தின் அடிப்படையில் நிர்வாகத்தை மாற்ற முயற்சிக்கிறது. பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தும் இந்த அமைப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு தீவிர அச்சுறுத்தலாக இருக்கிறது.
இந்த புதிய பட்டியலிடுதல், கனடாவின் பாதுகாப்பு, நுண்ணறிவு மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகள் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மேலும் திறம்பட மேற்கொள்ள உதவும் என்றும், கனடிய சமூகங்களை இன்னும் பாதுகாப்பானவையாக மாற்றும் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.


