பிரித்தானியாவில் கிரிப்டோகரன்சி மற்றும் NFT போன்ற டிஜிட்டல் சொத்துக்கள், இனி அதிகாரப்பூர்வ சொத்துகளாக (Property) சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடிப்படையாக, பிரித்தானிய பாராளுமன்றம் நிறைவேற்றிய Property (Digital Assets etc) Act சட்டத்திற்கு, மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் அரச ஒப்புதல் (Royal Assent) வழங்கியுள்ளார்.
இதுவரை, கிரிப்டோ சொத்துக்கள் நீதிமன்றங்களில் case-by-case அடிப்படையில் மட்டுமே சொத்தாகக் கருதப்பட்டன. ஆனால், இந்த புதிய சட்டத்தின் மூலம், “things in possession” (உடைமை) மற்றும் “things in action” (சட்ட உரிமைகள்) ஆகிய இரு பாரம்பரிய சொத்து வகைகளுடன் சேர்த்து, மூன்றாவது சொத்து வகையாக “டிஜிட்டல் சொத்துக்கள்” என்ற தனி வகையை உருவாக்கியுள்ளது.
இந்த மாற்றம், திருட்டு, மோசடி, திவால், மரபுரிமை மற்றும் பிற சட்ட நடைமுறைகளில் டிஜிட்டல் சொத்துக்களைத் தெளிவாகவும், திறம்படவும் கையாள வழிவகுக்கிறது.
கிரிப்டோ துறையினர் இந்த முன்னேற்றத்தை வரவேற்றுள்ளனர். CryptoUK என்ற தொழில்சங்கம், “இனி பயனாளர்கள் தங்கள் டிஜிட்டல் சொத்துக்களை சட்டப்படி மீட்கும் உரிமை பெற்றுள்ளனர்” என அறிவித்துள்ளது.
மேலவை உறுப்பினரான Gurinder Singh Josan MP, “இந்த மாற்றம், நுகர்வோருக்கு தெளிவான உரிமை, பாதுகாப்பு மற்றும் மோசடியில் இழந்த சொத்துக்களை மீட்க வாய்ப்பு அளிக்கிறது” எனப் பாராட்டியுள்ளார்.
வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த சட்டம் பிரித்தானிய கிரிப்டோ துறைக்கு சட்டபூர்வ அடித்தளத்தை உருவாக்குவதுடன், உலகளாவிய முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கையைத் தரும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.


