அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஒரு பெண் பாதுகாப்புப் படை அதிகாரி உயிரிழந்தார். மற்றொரு பாதுகாப்பு வீரர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது குடியேற்றக் கொள்கையை மறுசீரமைப்பதாக அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக, அங்கீகரிக்கப்படாத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் வெளிநாட்டினர் மீதான பாதுகாப்புச் சோதனைகளைத் தீவிரப்படுத்துவது ஆகியவை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, ட்ரம்ப் நிர்வாகம் அனைத்து நாடுகளையும் சேர்ந்தவர்களுக்கான புகலிட விண்ணப்பங்களை இடைநிறுத்தம் செய்துள்ளது. இந்த நிறுத்தம், அனைத்து புகலிடக் கோரிக்கைகளையும் பரிசீலிப்பதைத் தற்காலிகமாக நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடி வரவு சேவைகளின் (USCIS) இயக்குநர் ஜோசப் எட்லோ, “ஒவ்வொரு வெளிநாட்டவரும் முழுமையாக சரிபார்க்கப்பட்டு, பாதுகாப்பு ரீதியாக பரிசோதிக்கப்படுவதை உறுதிசெய்யும் வரை, புகலிட கோரிக்கைகளின் இடைநிறுத்தம் தொடர்ந்து அமலில் இருக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், வளரும் நாடுகள் (சொல்லப்போனால் “3-ஆம் உலக நாடுகள்”) எனப் பரவலாக குறிப்பிடப்படும் நாடுகளிலிருந்து வரும் நபர்களுக்கு அமெரிக்காவில் நிரந்தர குடியேற்றத்திற்கு தடை விதிக்கும் முடிவைத் தாம் எடுத்ததாக ட்ரம்ப் சில மணி நேரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதற்குப் பிறகே இந்த புகலிட விண்ணப்ப இடைநிறுத்த அறிவிப்பு வெளியானது.

