உலக அரசியல் சூழல் நாளுக்கு நாள் அதிகம் பதற்றமடைந்து வருகிறது. பல நாடுகளுக்கிடையிலான அரசியல் மோதல்கள், போர் அச்சுறுத்தல்கள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் காரணமாக, மூன்றாம் உலகப்போர் உருவாகும் சூழல் மெல்ல உருவாகி வருவதாக பல அறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையிலான பதற்றம், ரஷ்யா–உக்ரைன் போர், மேற்கு ஆசியாவில் நிலவும் அரசியல் குழப்பங்கள் மற்றும் உலக வர்த்தகத்தில் அமெரிக்கா விதித்து வரும் புதிய வரி கட்டுப்பாடுகள் ஆகியவை எந்த நேரத்திலும் உலக அரசியல் திசை மாறக்கூடும் என்ற நிலையை உருவாக்கியுள்ளன.
இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான Baba Vanga வின் கணிப்புகள் மீண்டும் உலகம் முழுவதும் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. ‘பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் பாபா வாங்கா, எதிர்காலம் குறித்த பல கணிப்புகளை முன்கூட்டியே கூறியவர் என நம்பப்படுகிறார். இளவரசி டயானாவின் மரணம் முதல் கொரோனா தொற்றுநோய் வரை பல நிகழ்வுகளை அவர் முன்பே கணித்ததாக கூறப்படுவதால், அவரது தீர்க்கதரிசனங்களுக்கு உலகளவில் பெரும் ஆதரவு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் போதே அந்த ஆண்டுக்கான பாபா வாங்காவின் கணிப்புகள் என்னவாக இருக்கும் என்பதே பலரின் ஆர்வமாக மாறியுள்ளது.
கடந்த காலங்களில் அவரது சில கணிப்புகள் பலித்ததாக கூறப்படுவதால், தற்போது நிலவும் போர் சூழல் காரணமாக பாபா வாங்காவின் பெயர் மீண்டும் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக 2026-ஆம் ஆண்டை குறித்த அவரது கணிப்புகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.
பாபா வாங்காவின் கணிப்புகளின்படி, 2026-ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப்போர் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கிழக்கு நாடுகளில் ஒரு பெரிய போர் வெடித்து, பின்னர் அது மேற்கு நாடுகளுக்கும் பரவும் என்றும் அவர் கூறியதாக நம்பப்படுகிறது. சீனா–தைவான் இடையிலான அதிகரிக்கும் பதற்றம், அதேபோல் ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற சக்திவாய்ந்த நாடுகளின் நேரடி ஈடுபாடு இந்த போரை தீவிரமாக்கும் என்றும், 2026-ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இந்தப் போர் உருவாகலாம் என்றும் அவர் கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக, 2026 தொடங்கியதிலிருந்தே அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே உலகளாவிய அரசியல் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த உலகப்போரின் விளைவுகள் மிகவும் பேரழிவாக இருக்கும் என்றும், குறிப்பாக ஐரோப்பிய கண்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு, பெரும்பகுதி பாழடைந்த நிலையாக மாறக்கூடும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பெரும் அழிவுகளுக்குப் பிறகு, ரஷ்யா மட்டுமே உலகில் எஞ்சியிருக்கும் ஒரே பெரிய வல்லரசு நாடாக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்ற நம்பிக்கை உள்ளது.
உலகம் தற்போது பல அரசியல் மோதல்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்களுக்குள் சிக்கியுள்ள நிலையில், பாபா வாங்காவின் இந்த கணிப்புகளை பலரும் தற்போதைய உலக நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு விவாதித்து வருகின்றனர். இருப்பினும், இவை அனைத்தும் பாரம்பரிய தீர்க்கதரிசன நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவையே என்பதையும் பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகள்





